Wednesday, November 04, 2009

ஆசையில்லாமல் ஒரு கடிதம்

வர மாட்டாயா என ஏங்கித் தவித்திருக்கிறேன்."நீ வருவாய் என" என ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.வரும் அறிகுறி தெரிந்தவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.வந்தவுடன் உன்னைப்பார்த்துக் கொண்டு,ஆசையாய் அனைத்து, ஹ்ம் அது ஒரு கனாக் காலம்.ஆனாலும் நான் உன்னை பிரிவேன்.பிரிந்தால் தான் சேர முடியும் என.

நாட்கள் செல்ல செல்ல,ஆடிக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த நீ,ஒவ்வொரு அமாவாசைக்கும் என்னை பார்க்க வந்தாய்.வந்தால் ராஜ அலங்காரம் தான் உனக்கு.எனக்கு நல்ல பொருத்தம் நீ என்ற மனப்பால் குடித்துக் கொண்டிருந்தேன்.

உன் வரவு,வழக்கமான ஒன்றாகிப் போன பின்,உன்னை மேய்ப்பதும் கட்டிக் காப்பதும் பெரும்பாடாகி விட்டது.மேலும் நீ இல்லாமல் நான் தனியாக இருப்பது தான் நிம்மதியாக மனதுக்கு உற்சாகமாய் உள்ளது.

இரண்டறக் கலந்து என்னோடு ஒன்றாகி விட்ட உன்னை இப்படி எல்லாம் இழிவாகப் பேசுவதற்கு என்னை மன்னித்து விடு, தாடியே!

No comments: